Sunday, May 1, 2011

உயிரை காக்கும் ஆஸ்பிரின் (Aspirin)


இன்றைய நாகரிகம் வளர்ந்த உலகத்தில், பல கோடி உயிர்களை மாரடைப்பிலிருந்து காப்பாற்றி வரும் உயர்ந்த உன்னத மருந்து, “ஆஸ்பிரின்!’ நெஞ்சு வலி, வாயுக் கோளாறு, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, வியர்வை கண்டவுடன், இ.சி.ஜி., எடுத்து, கரையக் கூடிய ஆஸ்பிரினை (ASPRIN) தண்ணீரில் போட்டு குடிக்க வைப்பார். இது மாரடைப்புக்கு காரணமான, புதிய ரத்தக்கட்டி உறைவதை தடுக்கும். ஆனால், ஆண்டுக்கணக்கில் ஏற்பட்ட கொழுப்பு கட்டியை கரைக்காது. 

கடந்த 1897ம் ஆண்டு, பிலிக்ஸ் ஆப்மென் (Flix Hoffman) என்ற டாக்டர், இசென் குஎன் (Echen Guen) என்பவரின் மேற்பார்வையில், “அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்’ (அகுஅ) கண்டுபிடித்தார். ஆனால், எனிஸ்ரிச் டிரெசர் (Enisrich Dreser) என்பவர், கெட்ட நோக்கத் தோடு இந்த மருந்தை நிராகரித்து விட்டார். ஹெராயின் (Herion) என்ற போதை மருந்தை மனதில் வைத்து, இப்படி நிராகரித்தார். அதே ஆண்டு, “ஆஸ்பிரின்’ என்ற பெயரில் டாக்டர் சீட்டு இல்லாமல், உடல்வலி, ஜுரம், காய்ச்சல் முதலியவைகளுக்கு மருந்தாக, Bayer கம்பெனி அறிமுகப்படுத்தியது. 

இந்த மருந்து, இப்போது ஒவ்வொருவரின் கைப்பையிலும் இருக்கிறது. ரத்தக்கொதிப்பு என்ற நோயால், ரத்தக்குழாய் தடித்து விடுகிறது. குறிப்பாக, கால்களின் ரத்தக்குழாய், மூளையின் ரத்தக்குழாய், இதய ரத்தக்குழாய், வயிற்றிலுள்ள மகாதமனி என்ற பெரிய குழாயில் தடிப்பு ஏற்படுகிறது. ரத்தக் கொதிப் புள்ளவர்கள் 4,000 பேரிடம், ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களுக்கு, தொடர்ந்து எட்டு ஆண்டுகள், “ஆஸ்பிரின்’ கொடுத்ததில், 9 சதவீதத்தினருக்கு, வயிற்று எரிச்சல், ரத்தம் கொட்டுதல் ஏற்பட்டது. எனினும், மாரடைப்பை தடுப்பது, மூளையின் ரத்த நாளத்தில் ரத்தக் கட்டு ஏற்படுவதை தடுப்பது, கால் ரத்தக் குழாயில் அடைப்பை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை இந்த மருந்து செய்தது. 

பெண்களின் மார்பக புற்றுநோயை, “ஆஸ்பிரின்’ தடுக்குமா? ஆம்… ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில், இது கண்டறியப்பட்டுள்ளது. 30, 40, 50 வயதிலுள்ள பெண்கள், ஹார்மோன்கள் குறைவு, அதிக இடுப்பளவு, அதிக எடை, இவைகளால் மாரடைப்பு அதிகமாக வர வாய்ப்புள்ளது. எனக்கு தெரிந்த பெண் ஒருவர், 35 ஆண்டுகளாக, வாரம் ஒரு முறையாவது தலைவலிக்கு ஆஸ்பிரின் எடுத்து கொள்கிறார். இப்போது அவர் வயது 75. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், பெரிய இடுப்பு, அதிக எடை, தாறுமாறான சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் இவருக்கு உள்ளது. இவர் எப்படி இன்னும் மாரடைப்பு, வாதம் இல்லாமல் இருக்கிறார்? இது ஆஸ்பிரின் காரணமாக இருக்கிறது. 

இதேபோல், 80 வயதுக்கு மேலான என் உறவினர், 40 ஆண்டுகளாக என் பாதுகாப்பில் தான் மருந்து எடுத்து வருகிறார். இவர்களுக்கு திடீர் மாரடைப்பு, வாதம் என்று ஒன்றும் வரவில்லை. காரணம் ஆஸ்பிரின் தான். ரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு மற்றும் “பிளேட்லெட்’ எனப்படும் தட்டை அணுக்கள் உள்ளன. இந்த தட்டை அணுக்கள், “மைக்ரோஸ்கோப்பில்’ பார்க்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் போல் காட்சியளிக்கும். இந்தத் தட்டை அணுக்கள் மீது, அராகிடோனிக் ஆசிட், சைக்கிளிக் ஏ.எம்.பி., ஆகியவை, பசை போல காணப்படும். ரத்தம் மிகவும் குறைந்த வேகத்தில் செல்லும் போதோ, ரத்த அடர்த்தி அதிகமாகும் போதோ, இந்த தட்டை அணுக்கள் ஒன்று மீது ஒன்று ஒட்டும். 

இதனுடன் ரத்தத்திலுள்ள பைப்ரோனோஜென் (Fibronogen) சேர்த்து, ரத்தக் கட்டை ஏற்படுத்தி, குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. தட்டை அணுக்களின் மேலுள்ள ரசாயன பொருட்களின் வேலையை, “ஆஸ்பிரின்’ செயலிழக்க செய்கிறது. சூப்பர் ஆஸ்பிரின்: ஆஸ்பிரின் போல, குளோபிடிகிரால் என்ற சூப்பர் ஆஸ்பிரின் இன்று உபயோகிக்கப்படுகிறது. “பரசாகிரில்’ என்ற புது சூப்பர் ஆஸ்பிரின் வந்துள்ளது. வருமுன் காப்போம்: உங்கள் குடும்ப டாக்டரை கேட்டு, தினமும் ஒரு ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வதால் தவறில்லை. உங்களுக்கு வயிற்றில் புண், வாயு இருந்தால், ஆஸ்பிரினை தவிர்க்கவும். நெஞ்சு வலி, வியர்வை என்று சந்தேகப்பட்டால், ஒரு, “ஆஸ்பிரின்,’ அதுவும் 75 மி.கி., போதுமானது. வாயுத் தொந்தரவு இருந்தால், இதோடு ஒரு, “பான்டப்ரசால்’ எடுத்து கொள்ளலாம். பிறகு மருத்துவமனை சென்று விடலாம். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்புள்ளவர்களுக்கு எப்போது ஸ்ட்ரோக், மாரடைப்பு வரும் என்று தெரியாது. 

ஆகையால், தவறாது மாதம் ஒருமுறை டாக்டரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. ஆறு மாதம், ஒரு வருடம் இப்படி பரிசோதனை செய்துக் கொண்டால், வியாதியின் தன்மை நன்கு கண்டுபிடிக்க முடியாது. திடீர் சிக்கல் வந்தால், மருத்துவமனை, ஐ.சி.யூ., என்று பல லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டி வரும். தினமும் ஆஸ்பிரின் (75 ட்ஞ்) உட்கொண்டு வந்தால், எதிர்காலத்தில் ஸ்ட்ரோக், மாரடைப்பை தடுக்கலாம். உங்கள் குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment