Friday, May 6, 2011

முதுகு வலியை (Back pain) தவிர்ப்பது எப்படி?


வாழ்க்கையில் ஒருதடவையாவது முதுகுவலியை அனுபவிக்காத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது! அதுவும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு முறையாவது `ஆ... அம்மா...' என்று சப்தமிட்டு, முதுகு வலியால் வேதனைப்பட்டிருப்பார்கள். முதுகுவலி என்றதும் நம் நினைவுக்கு வருவது, மற்ற நகரும் உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்தும், மனிதனின் முதுகெலும்புத் தொடர். இது ஒரே ஒரு தனி எலும்பு அல்ல. 33 எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள் ஆகியவை மிகவும் நேர்த்தியுடன் இணைந்த தொடர் சங்கிலியாகும். இந்த சங்கிலித் தொடரின் "தொடர்ந்த சேவை'', மனிதனுக்கு மிகத் தேவை !

கழுத்துக்குக் கீழே உள்ள பாகங்களுக்கு உணர்ச்சிகளை எடுத்துச் செல்வதும், மூளை யின் கட்டளைகளை கை, கால்களுக்கு எடுத்துச் செல்வதும் தண்டுவடத்தின் (Spinal Cord) மூலமாகவே நடைபெறுகிறது. இந்த தண்டுவடமும், அதன் நரம்புகளும் முது கெலும்புத் தொடரில் பாதுகாக்கப்பட்டு இதன் மூலமாகவே பயணம் செய்து, பிற பாகங்களை அடைகின்றன. தண்டுவடம் என்ற இந்த நீண்ட `கேபிள்' போன்ற நரம்பு களின் தொகுப்பு சுமார் பதினெட்டு அங்குல நீளம் கொண்டது. அதிலிருந்து முதுகெலும்பு களுக்கு இடையே வலது-இடது என இரண்டு பக்கமும் முதுகெலும்புத் தொடரைச் சார்ந்த நரம்புகள் (Spinal nerves) நம் தலைக்கு கீழே துவங்கி இடுப்புக் கட்டு வரை பல பாகங்களுக்கும் (கை, கால்களுக்கும்) செல்லுகின்றன.
இந்த முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், தலைக்குக் கீழே ஏனைய பாகங்களுக்கு மூளை யிலிருந்து புறப்படும் கட்டளைகளை எடுத்துச் செல்லுகின்றன. இந்த நரம்புகள் மூலமாகவே உடம் பின் பல பகுதிகளில் இருந்து உணர்ச்சிகள் தண்டுவடம் மூலமாக மூளைக்குச் செல் கின்றன.
முதுகெலும்புத் தொடர், பார்ப் பதற்கு கரும்புக் கணுக்கள் போல இருக்கும். இது அடியில் பரும னாகவும், மேலே போகப் போக மெலிதாகவும் காணப்படுகிறது. அதாவது நமது கழுத்துப் பக்கம் உள்ள முதுகெலும்புப் பகுதி மிக சிறியது. ஆனால், அந்த இடத்தில் இருக்கும் தண்டுவட நரம்புப்பகுதி பெரிதாக இருக்கும். பிறகு கீழே வர வரத் தண்டு வடத்திலிருந்து நரம்புகள் மற்ற பாகங்களுக்குப் பிரியப் பிரிய, தண்டுவடம் மெலிந்து விடுகிறது.
நாம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு முதுகெலும்பைச் சார்ந்த தசைகள், நாண்கள் மற்றும் மூட்டுக்களின் இயக்கமும் ஒத்துழைப்பும் மிகவும் தேவை. நாம் வளையும்போதும், நெளியும்போதும் அதை சிறப் பாக செய்ய அதைச் சார்ந்த தசைகளும், நார்க ளும், முது கெலும்புகளுக்கு நடுவே நல்ல நிலை யில் இருக்கும் ஜவ்வுகளும் (Intervertebral discs) தேவை. இந்த ஜவ்வுகள் அதிர்வுகளை சமப்படுத்தும் (Shock absorbers) பாகங்களாக செயல்படுகின்றன. இவை, முதுகெலும்புகளுக்கு நடுவே அமைந்துள்ளன. இந்த ஜவ்வுகள் ஸ்பெஷல் திசுக்களினால் ஆனவை. இவை, வெளியில் நார் போலவும் உள்ளே ஜெல்லி போன்ற சற்றுக் கொழகொழ திசுக்களாலும் ஆனவை.
நடுமுதுகிலிருந்து இடுப்புக்கட்டு (Pelvis) வரை உள்ள முதுகெலும்புப் பகுதியை `லம்பார்' பகுதி என்போம். லம்பார் பகுதியிலுள்ள L3 L4 L5எலும்புகளுக்கு நடுவே உள்ள ஜவ்வுகள் பலருக்கும் தேய்ந்து விலகிவிடுகிறது. அப்பொழுது, கீழ் முதுகில் பிடிப்புப் போல ஏற்படுகிறது. பிறகு எப்போதாவது எக்கச்சக்கமாக குனியும் போதோ சடாரென்று திரும்பும் போதோ இந்த ஜவ்வு பின் பக்கமாக, மிகவும் விலகி விடுகிறது. இதனால், கீழ் முதுகிலோ, இடுப்பு மூட்டின் பின்புறத்திலோ, தொடையிலோ கொக்கி போட்டு இழுப்பதைப் போல் சுரீரென்று வலி ஏற்பட்டு வேதனை அதிகமாகும்.
கீழ் முதுகில் ஜவ்வு விலகினால் தொடையில் ஏன் வலி உண்டாக வேண்டும்?
நம்தொடை கால் தசைகளின் அசைவுகளை உருவாக்கும் நரம்புகள், கீழ்முதுகெலும்பு துவாரங்கள் வழியாகத்தான் அதன் பயணத்தை ஆரம்பிக்கின்றன. ஜவ்வு விலகுவதால் நரம்புகளின் பாதை குறுகி, நரம்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறைகிறது. ஜவ்வு விலகியதால் அந்த நரம்புகளின் மேல் நேரடி அழுத்தமும் அதிகமாகிறது. இதனால் அந்த வலி தொடை அல்லது கால்பகுதியில் குடைச்சலும் வலியுமாக உணரப்படுகிறது.
வயதாகும் போது முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுக்கள் எல்லாமே பெருத்து திசுக் களின் எலாஸ்டிக்தன்மை கடினமடைகின்றது. மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தியும் குறைகிறது. இதன் காரணமாக முது கெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்து நரம்பு வெளியேறும் துவாரங்கள் நெருக்கப்படு கின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புகளுக்கு ரத்த ஓட்ட அளவும் குறைகிறது. இதனால் தொடை, கால்மூட்டின் பின்புறம், முழங்கால் மற்றும் கணுக்கால் வரை இழுத்தது போல் வலியுடன் கால் மரத்துப்போனது போல ஆகி விடுகிறது.
இந்த நிலையில் வலி ஏற்படும் பகுதியை அழுத்தமாக கட்டுப்போட்டுக் கொண்டால் அங்கு வரும் ரத்த ஓட்டம் குறைந்தோ - ஏன் நின்றோ கூட போய் விடலாம். இது புரியாமல், நாட்டு வைத்தியரைப் பார்த்து சிலர், காலில் கட்டுப்போட்டுக் கொண்டு மரத்துப் போன காலில் மேலும் வேதனையை அதிகமாக்கி வருகின்றனர். ஏதாவது ஆயின்மெண்ட தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. குறைவதுமில்லை!
கால்வலியுடன் இருப் பவர்களை பரிசோதித்து விட்டு `எக்ஸ்ரே' எடுத்துப் பார்க்க வேண்டும். எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும் போது மூட்டுப் பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்பு மூட்டுத் தேய்மானத்தால் ஏற்பட்ட வலியா என்பதைப் பெரும்பாலும் அனுபவமுள்ள டாக்டர்களால் அறிய முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாக தொந்தரவு என்றால் தொடையின் உள்பகுதி யிலோ, கால்மூட்டின் உள்ளேயோ வலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்து போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வது போல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம்.
ஆனால் முதுகு சிக்கலால் வலி ஏற்பட்டால் தொடையிலிருந்து கால்வரை சுரீர் என்று இழுக்கும் உணர்வு ஏற்படும். கணுக்கால் வரை இது பரவும். முதுகைச் சற்று, திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோ இது அதிகமாகும். ஸியாடிகா (Sciatica) எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும். படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டுவிட்டு எழுந்திருக்கும்போது இந்த வலி அதிகரிக்கும்.
முதுகுக்கு பிஸியோதெரபி கொடுத்தாலோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியை குறைக்க முடியும். வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதை குறைப்பது நல்லது. முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக் கொண்டு சோம்பலாக இருக்கா மல் முடிந்த வேலைகளை சுறுசுறுப்பாக பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத் தானாகவே சரியாகி விடும்.
மேலே குறிப்பிட்ட அத்தனையும் செய்தும் கால்வலி தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வரும். இப்போதுள்ள எம்.ஆர்.ஐ. பரிசோதனை மூலம், முதுகெலும் பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும் தசைநார்களின் தன்மையை அறியமுடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக்குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம் கண்டறிய முடியும்.
முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரங்கள் நெருக்கப்பட்டிருந்தாலோ, எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் மூலம் அனுபவம் உள்ள டாக்டர்களால், மிகத் துல்லியமாக கணித்து தகுந்த சிகிச்சையை திட்ட மிட முடியும்.
லேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் (Epidural Steroid) எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால்வலியைக் குறைக்க முடியும். ஆனால் தொடைவலி அல்லது கால்வலி மிகவும் அதிகமாகப் போய் தூங்க முடியாத அளவுக்கு வலி அதிக மானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்வது அவசியமாகிறது.
நகர்ந்து போன தொந்தரவு அதிகம் கொடுக்கும் ஜவ்வை அகற்ற வேண்டி இருக்கும் அல்லது முதுகெலும்பிலிருந்து குறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி துவாரத்தை சற்று பெரிதாக்கினால், கால் மற்றும் இடுப்பு வலி நன்றாகக் குறையும்.
பொதுவாக, லேசாக முதுகு வலி அவ்வப்போது இல்லாவிட்டால், நம்உடம்பு மனித உடம்பே இல்லை எனலாம்! நாம் விழிப்புடன் இருந்தால் முதுகில் அதிக வலியின்றி வாழ வழி உண்டு !!
விளக்கம்: டாக்டர் எம். பார்த்தசாரதி,

No comments:

Post a Comment