Friday, September 30, 2011

வீட்டுத் தொழில் பெண்களுக்கு லாபமா? பிரச்சனையா?


குடும்ப நிர்வாகத்தில் பெரும்பங்கு பெண்ணைச் சேர்ந்தது. குழந்தைகள் பராமரிப்பு, கணவரை கவனிப்பது, விருந்தோம்பல், வீட்டு வேலை, குடும்ப நிர்வாகம் என பல்வேறு பணிகளையும் கவனிக்க வேண்டியதிருக்கிறது. இவ்வளவு பொறுப்புகளுக்கு இடையே சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்களா? சுயதொழிலில் சந்திக்கும் இடர்பாடுகள் என்னென்ன? என்பது பற்றி ஒரு பார்வை.

கணவரின் வருவாய் குடும்பச் செலவுக்கு போதாது என்று நினைப்பவர்களும், தங்கள் தேவைகளுக்கு கணவரை சார்ந்திருக்கக்கூடாது என்று சிந்திக்கும் சிலரும் சுயதொழிலில் இறங்கி விடுகிறார்கள். இப்படி புதுமுயற்சியில் இறங்கும் சிலர் ஜெயித்திருக்கிறார்கள் என்றாலும் பலர் பலனடையவில்லை என்பதே உண்மை!

இதற்கு என்ன காரணம்? டெய்லரிங், பேஷன் என்று தாங்கள் கற்றறிந்த துறைகளில் சுயதொழிலைத் தொடங்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதிக வருவாய் கிடைக்குமென்று விளம்பரப்படுத்தப்படும் சில தொழில்களிலேயே அதிக பெண்கள் விட்டில்பூச்சிகளாய் விழுகிறார்கள்.

எம்.எல்.எம். எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் பெண்களை கவர்ந்திழுக்கும் பிரபல தொழிலாக இருக்கிறது. இது வீட்டில் தயாரிக்கப்படும் சத்து மாவில் இருந்து, பிரபல நிறுவனங்களின் பிளாஸ்டிக் பொருட்கள், கம்ப்யூட்டர்கள் வரை பலதரப்பட்ட பொருட்களையும் சந்தைப்படுத்தும் துறையாகும். இதில் பொருட்களை கூடுதல் லாபத்தில் விற்பனை செய்து அதில் ஒரு பங்கை உறுப்பினர்களுக்கு வழங்குவதால் மிகுதியான லாபம் கிடைப்பதாக அறிய முடிகிறது.

இந்த தொழிலில் ஆர்வத்துடன் களமிறங்கிய உஷாராணி என்ற பெண்ணின் அனுபவம் இது: "ஆரம்பத்தில் அதிக லாபம் கிடைத்ததால் முகவர்களை நியமித்து பணி செய்தேன். ஒரு கட்டத்தில் விற்பனை முடங்கி அதுவரை பெற்ற லாபம் அனைத்தையும் இழந்த பிறகு தொழிலை கைவிட்டுவிட்டேன்''

பட்டுப்புடவைகளை தவணை முறையில் விற்பனை செய்த இன்னொரு பெண், "என்னிடம் புடவைகள் வாங்கியவர்கள் சில தவணைகளுக்குப் பிறகு பணம் செலுத்த மறுத்தார்கள். தரமற்ற புடவையை தந்துவிட்டதாக கூறினார்கள். அதனால் நான் என் முதலை இழக்க நேரிட்டது'' என்றார்.

ஆனால் புடவை விற்பனையில் வெற்றி பெற்ற ஒரு பெண்மணியும் இருக்கிறார். அவர் கூறும்போது, "நான் முதலில் தவணைகளைப் பெற்றுக் கொண்டு முழுதொகையும் கிடைத்த பிறகுதான் புடவையைக் கொடுப்பேன். அதனால் எனக்கு நட்டம் ஏற்படவில்லை'' என்றார். இப்படி சாதுர்யமாக செயல்படும் ஒருசிலர் தான் வெற்றி பெறுகிறார்கள்.

டியூசன் எடுப்பது, நடனம் கற்றுத் தருவது என்று சம்பாதிப்பவர்களுக்கு அதிக சிக்கல்கள் இல்லையென்று நினைத்து விடாதீர்கள். பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யும் பெண்மணியின் கணவர் கூறுகிறார்: "வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் நிம்மதியாக சோபாவில் உட்கார்ந்து விட முடியாது. குண்டூசி, கத்தரிக்கோல் என்று ஏதாவது கிடக்கும். வீடும் குப்பைக்கூளம் போல கிடக்கும். அது மேலும் டென்ஷனை அதிகரிக்கும். பொம்மைகளை வாங்குவதற்கும், கற்றுக்கொள்வதற்கும் வருபவர்களின் அட்டகாசம் இன்னொரு புறம். இதற்கு என்னதான் தீர்வென்று யோசித்தேன். மாடியில் தனி அறை ஒதுக்கிக் கொடுத்தபிறகுதான் ஓரளவு சிக்கல் குறைந்தது'' என்றார் அவர்.

சீட்டுப் பிரிப்பதில் ஒரு பெண் ஆர்வம் காட்டினார். ஆரம்பத்தில் நிறைய பணம் சேர்ந்ததும் அது ஊரார் பணம் என்பதையே மறந்து ஆடம்பர செலவு செய்து பணத்தை காலி செய்துவிட்டார். சீட்டு தொகையை வாடிக்கையாளர்கள் கேட்ட சமயத்தில் பிரச்சினை உருவானது. இறுதியில் தற்கொலைக்கு முயன்றார் அந்தப் பெண். பிறகு கணவர், தன் அலுவலகத்தில் லோன் வாங்கி கடனை அடைத்த பிறகுதான் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இப்படி சுயதொழிலில் இறங்கிய பெண்களின் அனுபவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வரைமுறை இல்லாத வீட்டுத் தொழிலால் குடும்ப வாழ்க்கை பாதிக்கக்கூடாது. `பெண்கள்' சம்பாதிக்க கிளம்புவது, இப்படி பல ஆண்களுக்கு தொல்லையாக வந்து முடிவதால் அவர்கள் பயப்படுகிறார்கள். அகலக்கால் வைக்காமலும், அனுபவத்தோடும், தெளிவோடும் செயல்படுவோருக்கே வெற்றி கிட்டுகிறது.

நன்றி-தினத்தந்தி

No comments:

Post a Comment