Friday, September 30, 2011

முஸ்லீம்கள் ஏமாற மாட்டார்கள்...!


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தூக்கி நிறுத்தும் ஒரு சூழ்ச்சி நாட்டில் அரங்கேறி வருகிறது. பா.ஜ.க., சங்பரிவார் வட்டாரத்தில் நரேந்திரமோடிதான் பிரதமருக்கான வேட்பாளர் என்று கருதுவது அந்த வட்டாரம், எந்தத் தகுதியில் இருக்கிறது என்பதற்கான அடையாளம். என் வீட்டில் 
இருப்பவர்களிலேயே மகா மகா யோக்கியன் அதோ கூரைமீது ஏறி நின்று கொள்ளி வைக்கின்றானே அவன்தான்! என்றானாம் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுண்டு. பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திரமோடி தான் என்று பா.ஜ.க., வட்டாரம் கூறுவது இதனைத்தான் நினைவூட்டுகிறது. 
  
தமிழ்நாட்டில் மோடியின் விளம்பரதாரராக இருக்கக் கூடிய திருவாளர் சோ ராமசாமி உட்பட ஒரு தகவலைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றனர். முஸ்லீம்கள் மோடியை மதிக்கிறார்கள்; முஸ்லீம் பகுதியில்கூட மோடி அதிக வாக்குகள் பெற்று இருக்கிறார். மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்தபோது முஸ்லீம்களே அவருக்கு வாழ்த்துக் கூறினார்கள் - சிலர் நெடுஞ்சாண்கிடையாக மோடியின் முன் விழுந்து தங்கள் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர் என்றெல்லாம் அவாள் ஊடகங்கள் காற்று ஊதிக் காட்டுகின்றன.


முஸ்லீம்கள் மார்க்கத்தில் அடுத்தவர்கள் காலில் விழுவது எல்லாம் கிடையாது. அதற்கு மாறாக அங்கு நடந்திருக்கிறது என்றால் - அதுபற்றி சிந்திக்க வேண்டும். முஸ்லீம்களில் ஷியா பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்தப் பிரிவைச் சாராத மற்ற முஸ்லீம்களுக்கும் நீண்ட நாள் பகை உண்டு.


ஈராக்கில்கூட சதாம்உசேனை அமெரிக்க ஏகாதிபத்தியம் தூக்கில் தொங்க விட்ட போது இந்தப் பிரிவினர் கோலாகலமாகக் கொண்டாடினர் என்பது கவனிக்கத்தக்கதாகும். குஜராத்திலும் இந்த ஷியா பிரிவினர்தான் அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர் என்று முஸ்லீம் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்களைக் கொன்று குவித்த கொடுமைக்காரரான ஒருவரை முஸ்லீம்களின் தோழன் என்று காட்ட முயற்சிப்பது எவ்வளவு பெரிய நெஞ்சழுத்தமும் - ஏமாற்றுத்தனமும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.


குஜராத் கலவரத்தின் போது முகாம்களில் முடங்கிக் கிடந்த முஸ்லிம் மக்கள்பற்றி எவ்வளவு கேவலமாக விமர்சித்தார் இந்த மோடி. முகாம்களில் இருந்து கொண்டு முஸ்லிம் மக்கள் தொகையைப் பெருக்கம் செய்வதற்கு உதவி செய்ய முடியாது என்று கீழ்த்தரமாக மோடி பேசியதும், அந்தப் பேச்சு ஒலி நாடாவாக வெளிப்படுத்தப்பட்டதும் எளிதாக மறக்கப்படக் கூடியவையல்ல.


மோடியின் உண்ணாவிரதத்தில் முஸ்லீம் ஒருவர் குல்லா ஒன்றைக் கொடுத்து மோடியை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லையே மோடி. இதன் பொருள் என்ன? எவ்வளவுதான் வேடம் போட்டாலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உண்மை உருவம் புட்டுக் கொண்டு வெளியில் வரத்தானே செய்யும்.


பாரதீய ஜனதா கட்சியில் முக்தார் அபாஸ் நக்வி என்ற ஒரு பிரமுகரின் பேச்சு அடிபட்டதே, அவர் இப்பொழுது இருக்கும் இடம் தெரிகிறதா? தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் அவர்களைக்கூட - பா.ஜ.க.வின் தலைவராக்கி - பா.ஜ.க. என்பது பார்ப்பனர்களின் கட்சி அல்ல என்று காட்ட முயற்சி செய்தனர். அதுவும் நீடிக்கவில்லையே!


தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி அவர்களை பா.ஜ.க.வின் தலைவராக்கிக் காட்டி, அவர்களின் நோக்கம் வெற்றி பெறாத நிலையில், அவமானப் படுத்தித்தானே அவரைக் கட்சியை விட்டு வெளி யேற்றினர் - பின்னர் அவர் தி.மு.க.வில் சேர்ந்தாரே! முகம்மது அலி ஜின்னாவைப் பற்றி பெருமையாக சில வரி எழுதியதற்காக அத்வானி என்ன பாடுபட்டார்? இவற்றையெல்லாம் முஸ்லீம் மக்கள் மறந்துவிட்டு, பா.ஜ.க.,வின் கண்ணி வெடியில் சிக்கிக் கொள்வார்களா?


கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில்கூட முஸ்லீம் மாநாடு ஒன்றினை பா.ஜ.க., கூட்டி சில வேடிக்கைகளைச் செய்து காட்டியது. அந்த ஏமாற்றுத் தனத்தில் முஸ்லிம் மக்கள் பலியாகவில்லை. நேர்மையற்ற பார்வையும், திரைமறைவு திட்டங்களும் (Hidden Agenda) உள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிதான். யாரும் ஏமாந்துவிட வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!
நன்றி: விடுதலை

No comments:

Post a Comment