Monday, June 25, 2012

கைது நடவடிக்கையில் போலிஸ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!

குற்றவாளி ஒருவரை கைது செய்யும் போலீஸ் அதிகாரி, அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். ஆனால், எந்த அதிகாரியும் அடையாள அட்டையை பொருத்தி, கைது செய்வதில்லை. "நேம் பேட்ஜ்' மட்டுமே அணிந்திருக்கின்றனர்.

கைது செய்தவுடன், அங்கேயே கைது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குற்றவழக்குகளில் இந்த நடைமுறையை போலீசார் கண்டுகொள்வதில்லை. லஞ்ச வழக்கில் மட்டும் சம்பவ இடத்திலேயே கைது குறிப்பு தயாரிக்கப்படுகிறது.

கைது செய்யும் தகவலை, உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் கைது செய்தால் மட்டுமே, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்த விபரத்தை 12 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். "விசாரணை' என்ற பெயரில் தங்கள் கஸ்டடியில் வைத்திருக்கும் போலீசார், அதை கடைபிடிப்பதில்லை. இதனால் ஐகோர்ட்டில், போலீசிற்கு எதிராக "ஆட்கொணர்வு மனுக்கள்' தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது.

தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு, என்பதை கைதானவருக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், "கைது செய்த விபரம் வெளியே தெரிந்து விடும்' என்று, இந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதில்லை.

காவலில் உள்ள இடத்தில், கைது விபரம், கைது குறித்த தகவல், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட விபரம் மற்றும் எந்த அதிகாரி பொறுப்பில் உள்ளார் என்பதை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பல ஸ்டேஷன்களில் இதை பின்பற்றுவதில்லை. உயர் அதிகாரிகளுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர்.

கைதானவரின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். போலீசாரின் "கவனிப்பில்' காயம் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

கைதானவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

கைது குறித்த ஆவணங்களை குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். கோர்ட் கண்டிப்பிற்கு ஆளாக கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை போலீசார் பின்பற்றி வருகின்றனர்.

கைதானவரை விசாரிக்கும்போது வக்கீல் உடன் இருக்க வேண்டும். பிரச்னைக்குரிய வழக்குகளில் மட்டும் வக்கீல்களை உடன் இருக்க போலீசார் அனுமதிக்கின்றனர்.

கைது பற்றிய தகவலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை போலீசார் ஒருபோதும் பின்பற்றுவதே இல்லை. இந்த உத்தரவு அனைத்து ஸ்டேஷன்களிலும் காட்சி பொருளாக மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment