Wednesday, March 30, 2011

தேர்வு அறையில் செய்ய வேண்டியது என்ன...?

தேர்வுகள் நடக்கும் மாதம் என்றால் அது மார்ச், ஏப்ரல்தான். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. தேர்வு நேரத்திற்கு சற்று முன்பு தேர்வு அறையில் மாணவர்கள் பலரும் பாடங்களைப் பற்றி பேசுவதும், புத்தகங்கள் படிப்பதாகவும் இருப்பார்கள். ஆனால், இறுதி நேரத்தில் பாடங்களை படிப்பது மன அமைதியை இழக்கச் செய்யும். உங்களுக்கான நாற்காலியில் அமைதியாக அமருங்கள்.

சிறிது நேரம் எந்த விதமான குழப்பமும் இன்றி மனதை அமைதியாக வைத்திருங்கள். நண்பர்களுடன் வீண் விவாதம், அரட்டையும் உங்களது சக்தியை இழக்கச் செய்து விடும். நீங்கள் படிக்காத அல்லது உங்களுக்கு சற்று கடினமான பதில்களை இறுதி நேரத்தில் படிக்க வேண்டாம். இது தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்திவிடும்.

கேள்வித்தாளை வாங்கியதும் கேள்விகளை ஒன்றுக்கு 2 முறை படித்துப் பாருங்கள். நன்கு தெரிந்த கேள்விகள் கொண்டப் பிரிவினை முதலில் எழுதுவது நல்லது. சரியான இடம் விட்டு, தெளிவான கையெழுத்துடன் அடித்தல்கள் அதிகம் இல்லாமல் உங்கள் பதில்கள் இருப்பது நல்லது. ஒவ்வொரு கேள்விப் பிரிவிற்கும் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்திற்குள் பதில்களை எழுதி முடிப்பதால், இறுதி நேரத்தில் நேரமின்மையால் சில பதில்களை எழுத முடியாமல் போகும் நிலை உங்களுக்கு வராது.

தேர்வு எழுதி முடித்ததும் விடைத்தாளை கொடுத்து விடாமல், ஒரு முறை கேள்விகளின் சரியான எண்ணை பதிலில் எழுதி உள்ளீர்களா? அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி உள்ளீர்களா என்பதை சோதித்துக் கொள்ளவும். உங்கள் கணிதத் தாளில் அதிக மதிப்பெண் கேள்விகளுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள இறுதி மதிப்புகள் அடித்தல் திருத்தல் இல்லாமல் சரியாக குறிப்பிட்டுள்ளீர்களா என்று ஒரு முறை சோதிக்கவும்.

கூடுதலாக வாங்கிய தாள்களின் எண்ணிக்கையை சரியாக கூட்டி முன் பக்கததில் போடும் போது கவனமாக செய்யவும். எழுதாத விடைத்தாள் பக்கத்தை கோடிட்டு அடிக்கவும். எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு நேரம் முடியும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேறாதீர்கள்.

இக்னோவில் பட்டம் பெற்ற ஆறரை வயது சிறுவன் - 

வெறும் ஆறரை வயது நிரம்பிய ஒரு சிறுவன், இக்னோ பல்கலைக்கழகத்தின் பட்டம் பெற்றுள்ளான்.

இக்னோ நடத்தும் கைவினை மற்றும் வடிவமைப்பு(கிராப்ட் மற்றும் டிசைன் ) படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறும் தகுதியை அடைந்ததன் மூலம், இக்னோ பல்கலையின் இளம் பட்டதாரி என்ற சாதனையை செய்துள்ளான். இக்னோ பல்கலையின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு நடத்திய கிராப்ட் மற்றும் டிசைன் தேர்வில் 76% மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்து, இக்னோ பல்கலை உட்பட பலரது பாராட்டை பெற்றுள்ள அந்த ஆறரை வயது சிறுவனின் பெயர் திவ்ய பிரகாஷ் பாண்டே. 

இரண்டாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தற்போது டெல்லியில் வசித்து வருகிறான். மிக இளம் வயதில் ஒரு பல்கலை பட்டம் பெற்ற சாதனையாளர் வரிசையில் இந்த சிறுவன்தான் முதலிடம் பெறுகிறான். கைவினை மற்றும் வடிவமைப்பில் பால பருவத்தில் இருந்தே ஆர்வம் அதிகமாக இருந்ததால் முறையான பயிற்சியின் மூலம் இந்த சாதனையை அவன் நிகழ்த்தியுள்ளான்.

நன்றி: பயனுள்ள தகவல்கள் குழுமம்

No comments:

Post a Comment