Thursday, December 22, 2011

புதுவை (அமலோற்பவம்) பள்ளியில் "படம் பார்த்துப் பாடம் படி" !


''ஹோம் வொர்க் செய்யலைனு சார் அடிப்பாரும்மா!''
''கணக்குப் போடலைன்னா மிஸ் திட்டுவாங்கம்மா!''
''நான் இன்னிக்கு ஸ்கூல் போகலைம்மா!''
 
காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்குக் அனுப்பும்போது, பெரும்பாலான வீடுகளில் இப்படியான குரல்களைக் கேட்கலாம். ஆனால், புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்களிடம் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது. காரணம், பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு என்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் 'அமல் விஷன்’ கேபிள் நெட்வொர்க்தான்!

பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான லூர்து சாமியிடம் பேசினோம். ''வெறுமனே பாடங்களை நடத்துவதால் மட்டுமே மாணவர்களைப் படிக்க வைத்துவிட முடியாது என்பது என் கருத்து. எனவே, அவ்வப்போது டி.வி., வி.சி.டி. மூலம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் படங் களையும் வகுப்பறைகளில்வைத்தே ஒளிபரப்பி வருகிறோம். 2000-ம் ஆண்டு அடுத்தகட்ட முன்னேற்றமாக பள்ளி வளாகத்திலேயே முற்றிலும் குளிரூட்டப்பட்ட, புரஜெக்டருடன் கூடிய திரையரங்கு ஒன்றைத் தயார்செய்து, கல்விதொடர்பான படங்களை ஒளிபரப்பினோம். தொடர்ந்து 'யுரேகா’ என்ற மென்பொருள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டோம். அந்த நிறுவனம் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை அனிமேஷனில் வடிவமைத்து இருந்தார்கள். 
 
உதாரணமாக மனித இதயத்தைப் பற்றி மாணவர்கள் படிக் கும்போது, இதயத்தின் செயல்பாடுகளைக் கற்பனையில் பார்க்க முடியும். ஆனால், இந்த நிறுவனம் தயாரித்த மென்பொருளில், இதயத்தின் செயல்பாடுகளை முப்பரிமாணத் தில் பார்க்கலாம். அதோடு அது செயல்படும் முறையும் விளக்கப்படும். அதனால் வகுப்ப றையில் இதயத்தைப் பற்றி பாடம் நடத்தியவுடன் மாணவர்களை தியேட்டருக்கு அழைத்துச் சென்று இதயத்தையும் அது செயல்படும் விதத்தையும் திரை வடிவத்தில் காட்டும்போது, தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். பிறகு ஒவ்வொரு வகுப்பறையிலும் டி.வி. வைத்து டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தினோம். இதை 'ஸ்மார்ட் கிளாஸ்’ என்பார்கள். படிப்படியான நகர்வின் உச்சகட்டம்தான் 'அமல் விஷன்’ தொலைக்காட்சி!

அனைத்து வகுப்பறைகளையும் கம்ப்யூட்டர், கேபிள் நெட்வொர்க்கால் இணைத்து, சேனல் ஒளிபரப்பைத் தொடங்கினோம். தினமும் காலையில் ஒரு மணி நேரம் இந்த சேனல் ஒளிபரப்பாகும். வாரத்தில் ஒரு நாள் யோகா குறித்த நேரடி ஒளிபரப்பும் உண்டு. அதே போல தினமும் யாராவது ஒரு அறிஞரையோ, எழுத்தாளரையோ அழைத்துவந்து பேசவைத்து, அதனை மாணவர்களுக்கு ஒளிபரப்பிவருகிறோம். ஒவ்வொரு புதன் கிழமையும் தலைமை ஆசிரியர் உரை, தினமும் வழிபாட்டுப் பாடல்கள், காலையிலும் மாலையிலும் ஓர் ஆங்கில வார்த்தையை அறிமுகம் செய்து, அதற்கு எந்தெந்த இடத்தில் என்னென்ன அர்த்தங்கள் வரும் என்பதையும் கற்பிக்கிறோம். மதிய உணவு இடைவேளையின்போது மோட்டிவேஷன் மூவிஸ் என்று அழைக்கப்படும்லட்சியங்களை அடையப் போராடும் படங்களையும் ஒளிபரப்புகிறோம்!'' என்கிறார்.

சமயங்களில் மாணவர்களின் படைப்புகளை யும் ஒளிபரப்புகிறார்கள். அன்றைய முக்கியமான நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக மாற்றி, மாணவர்களையே வாசிக்கச் செய்கிறார்கள். அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு மாணவர்களிடையே கடும் போட்டி நடக்குமாம்!

மற்ற பள்ளிகளுக்கும் இது ஒரு பாடம்தான். புத்தகச் சுமை குறைத்து அறிவுச் சுமை அதிகரிக்க முனைவீர்களா?

ஜெ.முருகன்
நன்றி: ஆனந்த விகடன்

No comments:

Post a Comment