Friday, August 5, 2011

புறநோயாளிகளுக்கும் காப்பீடு திட்டம்...!



உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன.
பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளிட்ட 12 வகையான முக்கிய நோய்களுக்கு, பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.



இந்த எண்ணிக்கை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது போன்ற காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்தால், சிகிச்சையின் போதே காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக மருத்துவமனைக்கு வழங்கப்படும். முன்னதாக பணம் செலுத்தி விட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற காத்திருக்க தேவையில்லை.

மேலும், காப்பீட்டு தொகை, இந்த வகையான செலவிற்குதான் பொருந்தும் என்ற கட்டுப்பாடு எதையும் நிறுவனங்கள் விதிப்பதில்லை. ஒரு சில நிறுவனங்கள், புறநோயாளியாக சிகிச்சை பெறும் செலவுடன், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான செலவுகளையும் வழங்கக் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

பஜாஜ் அலையன்ஸ், அப்பல்லோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன. .சி..சி.. லம்பார்டு நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 3 லட்ச ரூபாய் வரையிலான காப்பீடு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஓராண்டில் புறநோயாளியாக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுக்கான வரம்பு, 8,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, காப்பீட்டு வசதி வழங்குவதற்கான காத்திருப்பு காலம், 2 ஆண்டுகள் மட்டுமே. இத்திட்டத்திற்கான ஓராண்டு பிரீமியத் தொகை,15 ஆயிரம் ரூபாய். ஒட்டுமொத்த நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். நல்ல நிதிவளமும், ஆரோக்கியமான பரம்பரையில் வந்தவர்களும், புறநோய் சிகிச்சையை உள்ளடக்கிய கூடிய சாதாரண மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யலாம். அதே சமயம், குறைந்த பிரீமியம் தொகை என்பதற்காக, காப்பீட்டு வரம்பை குறைத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

"பேமிலி புளோட்டர்' திட்டம்
இதில், அதிக தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், இத்திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை, குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல், ஒரே திட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் பயன் பெறலாம்.

உதாரணமாக, மேக்ஸ் பூபா நிறுவனத்தின் "பேமிலி புளோட்டர்' மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அதிகபட்சமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் காப்பீட்டு வசதியை பெறலாம். காப்பீடு கோராமல், தொடர்ந்து பல ஆண்டுகள் பிரீமியம் மட்டும் செலுத்தி வந்தால், மறு ஆண்டு பிரிமியத்தில் தள்ளுபடி வழங்கப்படும். அல்லது போனசாக, காப்பீட்டு தொகையின் வரம்பு உயர்த்தப்படும்.

"இன்டெம்னிட்டி' திட்டம்
மருத்துவ காப்பீட்டில், "இன்டெம்னிட்டி பாலிசி' எனப்படும் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முக்கிய நோய்களுக்கான பிரிவில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், எந்த தொகைக்கு காப்பீடு செய்திருந்தாலும், மருத்துவமனையில் செலவான தொகையை மட்டும் காப்பீட்டுதாரர் செலுத்தினால் போதும். இதில், பிரிமியம் தொகை, வழக்கமான காப்பீட்டு திட்டத்தை விட குறைவாகும்.

அதாவது, ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் "இன்டெம்னிட்டி பாலிசி' திட்டத்திற்கான பிரிமியம் 550 ரூபாய் என்றால், அதே திட்டத்தில் வழக்கமான பயன்கள் பிரிவின் பிரிமியம் தொகை 622 ரூபாய் என்ற அளவில் இருக்கும்.

மேற்கண்ட திட்டங்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்வதுடன், மருத்துவ காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை கூர்ந்து படித்து, உரிய விளக்கங்களை முகவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பின்னாளில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment