Saturday, July 2, 2011

இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை!


சர்க்கரை நோயாளிகள் பொதுவாக இன்சுலின் ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்வார்கள். புதிதாக இன்சுலின் ஊசி பயன்படுத்துவோர், ஊசி போட்டுக் கொள்வது மிகவும் பயத்தை உண்டாக்கும் செயல் என நினைப்பார்கள். அது உண்மையல்ல. எளிதாக இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.


இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்வதற்கு சிரிஞ்சுகள் அவசியம் தேவை என்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக 40 ஐ.யு. அளவுள்ள சிரிஞ்சுகள் ஏற்புள்ளவை. எனவே இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இன்சுலின் ஊசியை உடலில் செலுத்திக் கொள்வதற்கு முன்பு சிரிஞ்சு, ஆல்கஹால் ஸ்வாப், இன்சுலின் ஆகியவற்றை தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கைகளை சுத்தமாகக் கழுவிக்கொண்டு பாட்டிலை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து மெதுவாக உருட்ட வேண்டும். இது இன்சுலினை ஒன்றாகக் கலக்கும். கலக்குவதற்கு குலக்க வேண்டாம். இதனால் காற்றுக்குமிழிகள் தோன்றி சிரிஞ்சினுள் செல்ல நேரிடலாம்.

இன்சுலின் புதிய பாட்டிலாக இருநூதால் பிளாஸ்டிக் மூடியை திறந்து வீசிவிடவும்.

இதேபோல் சிரிஞ்சின் ஊசி பொருத்தப்பட்டுள்ள மூடியையும் நீக்கவும். ஊசி மேல் நோக்கியவாறு இருக்கும் வகையில் சிரிஞ்சைப் பிடிக்கவும். எப்போதும் சிரிஞ்சை உங்கள் கண் மட்டத்திற்கு சமமாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டால்தான் பாரல் மீதுள்ள அளவீட்டை பார்க்க முடியும்.

இன்சுலின் பாட்டில்கள் வாக்யூம் - சீல் செய்யப்பட்டவை. நீங்கள் இன்சுலினை வெளியே எடுக்கும் முன்பு காற்றை பாட்டிலின் உள்ளே விடவேண்டும். மெதுவாக இழுக்க வேண்டும். நீங்கள் நாற்பது யூனிட் இன்சுலினை வெளியே எடுத்தால், சிரிஞ்சினுள் நாற்பது யூனிட் காற்றை இழுக்க வேண்டும்.

இன்சுலின் பாட்டிலை கவிழ்த்து, சிரிஞ்சு கீழ்ப்பகுதியில் இருக்குமாறு பிடித்துக்கொண்டு பிளஞ்சரை மெதுவாக கீழ் நோக்கி இழுத்து இன்சுலினை போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம். சிரிஞ்சினுள் காற்று புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காற்று இருந்தால் அதை வெளியேற்றிவிடுவது அவசியமாகும்.

இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட இன்சுலினை ஊசியின் முனையில் மூடியிட்டு வைத்துக்கொண்டு உடலில் எந்த இடத்தில் அதை குத்திக்கொள்ள நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் ஆல்கஹால் கொண்டு நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

ஊசியிலிருந்து மூடியைக் கழற்றிவிட்டு பென்சிலைப் பிடிப்பதைப் போல் ஒரு கையினால் சிரிஞ்சைப் பிடித்து, சுத்தம் செய்யப்பட்ட பகுதியை லேசாகக் கிள்ளிப் பிடிக்க வேண்டும். கிள்ளிப்பிடிக்கப்பட்ட பகுதியில் ஊசியைச் செலுத்தலாம். ஊசி குத்திய இடத்தில் ஆல்கஹால் ஸ்வாப்பை வைத்து அழுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, துடைக்கக்கூடாது. ஊசியில் ஒரு துளி இரத்தம் வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் எடுத்துக்கொண்ட இன்சுலின் அளவை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடங்களுக்குள் கலக்கப்பட்ட இன்சுலினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் இன்சுலின் வேலை செய்யும் விதம் மாறுபடக்கூடும்.

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்

No comments:

Post a Comment