Friday, July 29, 2011

மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் ?


மொபைல் போன், ஐபோன் போன்றவற்றை பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக் கேடுகள் ஏற்படுகின்றன என்ற நிலையில், மொபைல் போனை, உடலில் இருந்து 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் மொபைல் போன் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இதுவரை ஒருவர், மற்றொருவருடன் தொடர்பு கொள்ள வீட்டில் உள்ள போனையோ அல்லது போன் பூத்தையோ பயன்படுத்தவேண்டும் என்று இருந்த நிலையை மொபைல் போன் வரவு தகர்த்தது.

இதன் காரணமாக, ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும், தான் பேச விரும்புபவரிடம் மொபைல் போன் மூலம் எளிதாக தொடர்பு கொள்ளலாம். இந்த வசதியால் மொபைல் போன் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது 60 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன.

மொபைல் போன், ஸ்மார்ட் போன் மற்றும் ஐபாட் ஆகியவை தற்போது அதிகளவில் மக்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.இவற்றின் விற்பனை அதிகரிப்பு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை வளர்ச்சியின் அடையாளமாக கருதப்பட்டாலும், இதில் உள்ள ஆபத்து குறித்து தற்போது தெரிந்துள்ளது. மொபைல் போன் மற்றும் மொபைல் டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்களால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து என்று விஞ்ஞானிகளால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவதால், அதிலிருந்து வரும் கதிர்கள் காதை பாதிக்கும் என்றும், பாக்கெட்டில் வைத்திருந்தால் இதயத்தை பாதிக்கும் என்றும், இடுப்பில் வைத்திருந்தால் சிறுநீரகத்தைபாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. மொபைல் போன் வாங்கும் போதே அதனுடன் பாதுகாப்பு கையேடும் கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த கையேட்டை யாரும் படிப்பதில்லை அல்லது படிப்பதற்கு நேரம் இல்லை. ஆப்பிள் ஐபோன் நான்கு வாங்கும் போது அதனுடன் கொடுக்கும் கையேட்டில், "ஐபோனை பயன்படுத்தும் போது, உங்கள் உடலில் இருந்து 15 மி.மீ., தூரத்தில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.அதற்கான உறை அல்லது பெல்ட் கிளிப் அல்லது அதற்கான பிடிப்பான் போன்றவற்றை பயன்படுத்தவும்.

உலோக பொருட்களை தொலைவில் வையுங்கள்' என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை வைக்க, அதற்காக உள்ள பவுச்களை பயன்படுத்த வேண்டும். பிளாக்பெர்ரி 9,000 போன் பயன்படுத்துபவர்கள் உடலில் இருந்து 2.5 செ.மீ., வெளியே அதற்காக உள்ள உறையில் இட்டு தொங்கவிட வேண்டும் என்று பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் (எப்.சி.சி.,) வழிகாட்டி குறிப்பிடுகிறது.

மோட்டோரோலா டபிள்யூ 180 போனை பயன்படுத்துபவர்கள், தங்கள் உடலுக்கு வெளியே ஒரு அங்குலம் தொலைவில் வைத்து கொள்ள வேண்டும். இந்த மொபைல் போனை வைப்பதற்கு நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாத கிளிப்களையோ, பிடிப்பான்களையோ, தொங்கும் உறைகளையோ பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. "மொபைல் போனால் உடல் நலத்திற்கு சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில், அது குறித்து விஞ்ஞானிகளின் கவனத்திற்கு மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்கள் கொண்டு செல்ல வேண்டும். மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், உடலில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் வைத்து கொள்வது பாதிப்பை குறைக்கும்' என்கிறார் எப்.சி.சி.,யின் முன்னாள் அதிகாரி ராபர்ட் கிளைவ்லேண்ட்.

அமெரிக்காவில் விற்பனையாகும் எல்லா மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கும் ஒரு வழிகாட்டியை, கடந்த 2001ம் ஆண்டு எப்.சி.சி., அனுப்பி மொபைல் போன் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டு இருந்தது.அதில், ஒரு கிலோகிராம் உடல் தசைகள் தாங்கக்கூடிய 1.6 வாட் ரேடியோ அலைவரிசைக்கு குறைவான கதிர்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், ரேடியோ அலைவரிசை கதிர்களால் வெப்ப பாதிப்பு போன்றவை ஏற்பட்டால் விஞ்ஞானிகளின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், புளூடூத், வி-பி மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை பயன்படுத்தும் போது முழு அளவில் வரும் சிக்னல்களின் சக்தி ஆகியவற்றிற்கு தரம் நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால், மொபைல் போன் வைத்திருப்பவர்கள் முழு சக்தியுடன் வெளிப்படும் ரேடியோ அலைவரிசை கதிர்களால் ஏற்படும் ஆபத்து குறித்து கவலைப்படாமல், உடலை ஒட்டியுள்ள சட்டை அல்லது பேன்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்துகின்றனர்.ரேடியோ அலைவரிசை கதிர்கள் மொபைல் போனில் இருந்து அதிக சக்தியுடன் கூர்மையாக வெளிப்படுகிறது. தூரம் செல்ல செல்ல அதன் சக்தி குறைகிறது. எனவே, இனியாவது உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க 1.5 முதல் 2.5 செ.மீ., தூரத்தில் வைத்து மொபைல் போனை பயன்படுத்தினால் நல்லது.

No comments:

Post a Comment