Friday, July 8, 2011

குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் [water purifiers] அபாயகரமானவை !


இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள்,சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மையுடையவை என்றும் அபாயகரமானவையாம். இந்திய நுகர்வோர் இயக்கத்தைச் சேர்ந்தவரும், தன்னார்வலருமான பிஜோன் மிஸ்ரா எழுதிய குடிநீர் சுத்திகரிப்பான்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த புத்தகம் சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.


 இந்தியாவில் 80 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற குடிநீரே ஆகும். பெரும்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நுகர்வோரை தவறாக திசை திருப்புகின்றன. இதற்கு பொதுமக்களிடையே சுகாதாரமான குடிநீர் குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும்.

இந்தியாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் ரசாயனம் மூலம் குடிநீரை சுத்திகரிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தைப் பின்பற்றுகின்றன.


இது பொதுமக்களுக்கு மிகுந்த சுகாதார சீர்கேட்டையும் ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே குறைந்த தரத்திலான சுத்தகரிக்கப்பட்ட தண்ணீரை அளிக்கின்றன. இத்துடன் தங்களது தயாரிப்புகளில் எந்தெந்த ரசாயனம், எந்த விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றி தெளிவாக குறிப்பிடுவதில்லை.


இவற்றையெல்லாம் கண்காணிப்பதற்கான கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் இல்லாத காரணத்தால்தான், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு சாதன தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற சுத்திகரிப்பானை நுகர்வோருக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றன.சுத்திகரிப்பான்களில் பயன்படுத்தப்படும் குளோரின் உள்ளிட்ட ரசாயனப் பொருள்களின் அளவை கண்காணிக்க வேண்டும்.

நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் இதர ரசாயனப் பொருள்கள் சுத்திகரிப்பானையே கெடுத்துவிடும். இதனால் சுத்திகரிப்பானில் கரையும் இதர பொருள்களும், குடிநீரில் கலந்து விடும் அபாயம் உள்ளது.


கடுமையான விதிகள் வேண்டும்: குடிநீர் சுத்திகரிப்பான்களின் தரத்தை வரையறை செய்வதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். எனவே நுகர்வோர் நலன் கருதி, பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற கடுமையான விதிகளை அமல்படுத்திட வேண்டும்.


குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து அறிவியல் ரீதியில் தான் கண்டறிந்த ஆய்வு தொடர்பான தகவல்களை ஆதாரத்துடன் தனது நூலில் பிஜோன் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment