அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியால் போக்குவரத்து நேரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது. இதில் அடுத்த புரட்சியாக `ராக்கெட் பிளேன்’ உருவாகவிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான `ஈ.ஏ.டி.எஸ்.’, ஜப்பான் நாட்டுடன் இணைந்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
புதிய `ராக்கெட் பிளேன்’ பற்றி ஈ.ஏ.டி.எஸ். கூறுகையில், `கார்பன் வெளியேற்றம் மிகவும் குறைந்த ஹைபர்சோனிக் போக்குவரத்து’ என்று தெரிவித்துள்ளது.
இந்த `ராக்கெட் பிளேன்’ மூலம் உலக நாடுகளுக்கு இடையே அதிவேகத்தில் பயணிக்க முடியும். உதாரணமாக, ஆசியக் கண்டத்தில் உள்ள ஜப்பானின் டோக்கியோவில் இருந்து ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பாரீஸுக்கு இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம்.
இந்த விமானத்தில் 50 முதல் 100 பயணிகள் வரை பயணிக்கலாம். இது, சாதாரண என்ஜினைக் கொண்டே `டேக்-ஆப்’ ஆகும். அதற்கான எரிபொருள், கடற்பாசிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உயிர் எரிபொருளாக இருக்கும். தரையில் இருந்து சாதாரண என்ஜினால் எழும்பும் விமானம், பின்னர் ராக்கெட் என்ஜினால் செயல்படத் தொடங்கும்.
அந்த ராக்கெட் என்ஜின், ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் எரிபொருளாகப் பயன்படுத்தும். எனவே என்ஜினில் இருந்து வெளியேறுவது வெறும் நீராவியாக மட்டுமே இருக்கும்.
இன்றைய விமானங்கள் பூமிப் பரப்பில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கின்றன என்றால், இந்த ராக்கெட் பிளேன் 32 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும்.
கீழே இறங்குவற்கு, ராக்கெட் என்ஜின் அணைக்கப்பட்டு, மெதுவாகப் பூமி நோக்கித் தாழும். தரையை நெருங்கியதும் சாதாரண என்ஜினை பயன்படுத்தி இறங்கும்.
என்ன, ராக்கெட் பிளேனில் பயணிக்கத் துடிக் கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இதற்கான மாதிரியே 2020-ம் ஆண்டுவாக்கில்தான் தயாராகும். 2050-ம் ஆண்டில் மக்கள் போக்குவரத்துக்கு வரும்.
No comments:
Post a Comment