Sunday, April 24, 2011

கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்


கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்'  பச்சிளம் குழந்தைகள் தின வாடகைக்கு கிடைக்கும் என, விளம்பரம் ஒன்றுதான் இல்லை அந்தளவுக்கு “பிச்சை பிசினஸ்” கொடிக்கட்டிப்பறக்கிறது. கோவையில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்க பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது முன்பெல்லாம் ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள் மட்டுமே கையேந்தி வந்தனர். தற்போது, இளம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள்கூட ரோட்டில் ஆங்காங்கு அமர்ந்தும் வழிபாட்டு தலங்களில் அமர்ந்தும் பிச்சை எடுப்பதையும் தாராளமாக காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தற்போது பச்சிளம் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தி வருகிறது சில  கும்பல். 

கோவையில் முகாமிட்டிருக்கும் வடமாநில பெண்கள் சிலர், கையில் பச்சிளம் குழந்தைகளுடன் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று, சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் ரத்த காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாக காணும் வகையில் காயங்களும் உள்ளன.குழந்தைகளை பார்க்கும் பலரும் நோட்டுகளை கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இம்முறையில்  ஒவ்வொரு பெண்ணுக்கும் தினசரி சுமார் 500 ரூபாய் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பார்ப்போர் பரிதாபப்பட வேண்டுமே என்பதற்காக குழந்தைகளுக்கு செயற்கையான காயத்தை ஏற்படுத்துவதாகவும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை காவல்துறையில் யாரும் புகார் தர முன்வரவில்லை.

மேலும் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கும் விடப்படுகின்றனர். கோவை மாநகரில் காந்தி புரம், பார்க் கேட், வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம், சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமா நிலத்தவர்கள் அதிகளவில் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இங்குள்ள பல பெண்கள் தங்களது குழந்தைகளை, பிச்சை எடுக்கும் பெண்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதாகவும், அதற்கு கூலியாக 50 ரூபாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

\பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். இச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனினும், இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால்,"பிச்சை எடுத்தல் தடைச்சட்டத்தை' அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிர முனைப்பு காட்டுவதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து மாநகராட்சி, அரசு காப்பகங்களில் அடைத்தாலும் தப்பி யோடிவிடுகின்றனர். இதனால்  காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும், குழந்தைகளை வாடகைக்கு விடுவதும், பிச்சை எடுக்க வைப்பதும், காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவதும் கொடூரமான குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களை தடுக்கவாவது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Thanks  www.inneram.com

No comments:

Post a Comment