Saturday, April 23, 2011

குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பு! ஐபிஎஸ் அதிகாரி குற்றச்சாட்டு

அஹமதாபாத்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத் முழுவதும் நிகழ்ந்த கலவரத்துக்கு அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியும் உடந்தை என்று மூத்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 14-ம் தேதி நேரடியாக பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். இது கோத்ரா கலவரம் குறித்து சிறப்பு விசாரணை அமைப்பு நடத்தி வரும் விசாரணை தொடர்பானது என்று அப்போது சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார். அதில் தான் கூறியுள்ள விஷயங்கள் குறித்து முழுமையாகத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.  இந்நிலையில் பிரமாணப் பத்திரத்தில், அவர் கூறியுள்ளதாக சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தை நடத்தினார். அப்போது, "இந்துக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள், முஸ்லிம்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும், வன்முறையாளர்களை அடக்க வேண்டாம்' என்று போலீஸ் உயரதிகாரிகளிடம் மோடி கூறியதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் சஞ்சீவ் பட் கூறியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

மேலும் கோத்ரா கலவர வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழு மீது தனக்கு நம்பிக்கையில்லை, அந்த அமைப்பு தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் செயல்படவில்லை, குஜராத் அரசைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது என்றும் அவர் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  1988-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், குஜராத்தில் கலவரம் நிகழ்ந்த போது மாநில புலனாய்வுப் பிரிவில் இணை கமிஷனராக இருந்தார். இப்போது மாநில ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தின் தலைவராக இருக்கிறார்.  குஜராத்தில் 2002-ல் நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பான வழக்கு ஏப்ரல் 27-ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினமே சஞ்சீவ் பட் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் குறித்தும் விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  முன்னதாக குஜராத் கலவரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த ஜாஃப்ரியின் மனைவி ஷாகியா ஜாஃப்ரி அவரது வீட்டில் வைத்து வன்முறையாளர்கள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. 

முன்னாள் சிபிஐ தலைவர் ஆர்.கே. ராகவன் தலைமையிலான இந்த விசாரணைக் குழு சஞ்சீவ் பட்-டிடம் மார்ச் மாதத்தில் சில கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றது. இந்த வழக்கு தொடர்பாகதான் இப்போது உச்ச நீதிமன்றத்தில் அவர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.  பாஜகவின் பதில் என்ன? காங்கிரஸ்: நரேந்திர மோடி மீது மூத்த ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதில் என்ன? சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பிரதமரை பதவி விலகக் கோரும் பாஜக மேலிடம், இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு என்ன கூற இருக்கிறது என்று குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா கேள்வி எழுப்பியுள்ளார்.  

உச்ச நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது- பாஜக: ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள தகவல்கள் உண்மையானது அல்ல. இந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதி கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, தில்லியில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.  தான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள விஷயங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சஞ்சீவ் பட், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உச்ச நீதிமன்றம் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 முன்னதாக 2002 பிப்ரவரியில் கோத்ராவில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டி தீவைத்து எரிக்கப்பட்டது. அதில் அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேகவர்கள் உள்பட சிறுவர்கள், முதியவர்கள் என 58 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து குஜராத் முழுவதும் கலவரம் பரவியது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 3000  இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment